இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. இது காலம் காலமாக நான் உணர்ந்து கொண்டிருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. மண்ணில் ஒரு உடலில் ஆன்மா வாழும்வரை அந்த ஆன்மா தான் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் இடம்பெறுகின்றன. ஆனால் இதி கூட கவலைக்கிடமான விஷயம் சில இடங்களில் இந்த சடங்கை செய்ய வருபவர்களே தப்பாக செய்வதும் சில பெரியவர்கள் இதை அறியாமல் தப்பாய் வழிநடத்துவதும் சிலர் ஏனோ தானோ என்று செய்வதும் இன்று பல இடங்களில் நடந்தேறுகின்றது.
இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தெரியாமல் இருப்பது கண்கூடு. அதற்க்கு நானும் விதி விலக்கல்ல. அப்படி இருக்கையில் இந்த பதிவு எப்படி என நீங்கள் கேட்கலாம். இன்று காலை எனக்கு உறவினர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தன தந்தையின் நினைவேட்டுக்கு பல அரிய விஷயங்களை சேர்க்கவேண்டும் அதில் இந்த சடங்குகள் சம்பந்தமான விடயம் கட்டாயம் இடம்பெற வேண்டும் காரணம் பலர் அறியாமல் தடுமாறுகின்றனர் என்று சொன்னார். அதற்கு என்னாலான உதவியாக இதை செய்ய சில மூத்தோரிடமும் சில நூல்களிலும் படித்து அதன் தொகுப்பாக இதை இங்கே தருகின்றேன்.
இந்த வழக்குகள் சில இடங்களில் மாறி இடம்பெறுகின்றது என்றாலோ? மேலதிக கருத்துக்கள் நடைமுறைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலோ பின்னூட்டத்தில் சொன்னால் நம்மை போல் பலர் அறியக்கூடியதாக இருக்கும்.
ஒரு மனிதனாக ஒரு நாட்டவனாக ஒரு தமிழனாக ஒரு உயிராக பிறந்தாலும் நானும் ஒரு சைவ சமயத்தை பின்பற்றுபவன். இங்கே நான் இடும் சடங்குகள் பற்றிய இடுகை சைவ சமயத்தை சார்ந்தவர்களுக்கே. சைவர்கள் பிறப்பது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளை சந்திப்பவர்கள். அந்த வகையில் இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது. அதாவது அபாரம் என்றால் பிந்தியது எனவே பிந்திய கிரியை என இது பொருள்படுகின்றது. இந்த சடங்குகளை செய்வதன் மூலமே பிதிர்கள் சாந்தி அடைகின்றன என்ற நம்பிக்கை உண்டு.
இந்த அபரக்கிரியையில் சூர்ணோத்சவம்(மரணச்சடங்கு), தகனம், அஸ்திசஞ்சயனம்(காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, ருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திரவிருத்திசம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம்(வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கியைகள் நடைபெறுகின்றன.
இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத நாலாம் வருணத்தாருக்கும் இறந்தவரின் உடலில் (பிறேதத்தில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் ஆசாரியாரும் செய்விக்கும் கர்த்தாவும் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிட்டும். மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியர்களும் சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வாவ்திபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு பசு தானம் செய்யப்படுவது வழக்கம். இதனை உத்திராந்தி தானம் என்பர். இது உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் செய்யும் கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஓத வேண்டும். திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருக்கி வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓத வேண்டும்.
மரணனமடைந்தவரை உடலுக்கு குளிப்பாட்டி அவரை அலங்கரித்து தர்ப்பைப்புல் பரப்பி தலை தென் புறம் வைக்க பிரேதத்தை வைத்து படுத்த வேண்டும். இறந்தவரின் உடலின் தலைப்பகுதியில் விளக்கேற்றி வைக்கவேண்டும்.
மரணச் சடங்கு - சூர்ணோத்சவம்
இறந்தவர் தகப்பனாக இருப்பின் அவரின் மூத்த மகனும் தாயாக இருப்பின் கடைசி மகனும் கிரியை செய்வதே முறை. பிள்ளைகள் இல்லாதவிடத்தோ அல்லது அவர்களால் கிரியை செய்யமுடியாத சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஒழுங்கில் பின்வருவோர் கிரியை செய்ய உரித்துடையவர்கள்:
- மகன்
- மனைவி
- மகள்
- இறந்தவரின் அண்ணன்
- இறந்தவரின் இளைய சகோதரர்
- இறந்தவரின் சகோதரரின் மகன்
- இறந்தவரின் தந்தை
- இறந்தவரின் தாய்
- இறந்தவரின் மருமகன்
- இறந்தவரின் சகோதரி
- இறந்தவரின் சகோதரியின் மகன்
- தந்தை வழி சபிண்டன்
- சமானோதகன்
- தாய்வழிச் சபிண்டன்
- தாயின் சமானோதகன்
- சீடன்
- குறு
- மகளின் கணவன்
- நண்பன்
- அரசன்
இதேபோல மகனால் மரணச்சடங்கை தொடர்ந்து இடம்பெறும் கிரியை செய்ய முடியாதென்றால் இன்னொருவர் அந்த கிரியையை செய்யலாம். ஆனால் இவரையும் சேர்த்து வைத்தே ஆரம்ப கிரியை செய்யவேண்டும். பொதுவாக அந்தியேட்டி கிரியை இறந்தவரின் 31 ஆம் நாள் செய்யப்படுவதே வழக்கம். இந்த தினத்தை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.
மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் மண்டபம் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை ,தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் மெழுக வேண்டும். மரணக்கிரியை செய்யும் வேளை நடுவில் ருத்திரகும்பமும், அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர் கும்பமும்,மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, பேருக்கு பதில் மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக்குடக் கும்பம் வைக்க வேண்டும். அபிஷேகம் செய்யும் முகமாக பிறேதத்தினை வீட்டின் தென் புறத்தில் வடக்கு நோக்கி தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்த வேண்டும். அதன் பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின் அரிசிமா, மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டு,பால்,தயிர்,இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தா மேற்கு முகமாக நின்று கீழிருந்து மேலாக அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த பிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் கும்ப அபிஷேகம் நடைபெறும். அதாவது பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலையை வைத்து திருநீறு பூச வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும்.அறுகு, மஞ்சள் போடி போன்றனவற்றை உரலில் இட்டு பேருக்கு பதிலாக மணியடித்து பத மந்திரம் சொல்லி எட்டுத்தரம் இடித்து பின்பு, திருப்போர்சுன்னப்பாடி சுன்னமிடிக்க வேண்டும். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும்.
சுண்ணம் இடிக்கும் தறுவாயில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பது வழக்கம். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கட்டி கால் முன்பக்கமாக இருக்கும் படி மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்ளி வைக்க இருப்பவர் நெருப்புச் சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாக செல்ல ஆசௌச உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்ல வேண்டும். ஏனையோர் பின் செல்லக்கூடாது. மயானத்தை அடைந்ததும் முதலில் தலைப்பக்கமும் பின்னர் கால்புறமும் செல்லக்கூடிய வகையில் பிரேதத்தை உள்நுழைக்க வேண்டும். மயானத்தில் வடக்கு தெற்காக விறகினை அடுக்கு அதன் மேல் பிரேதத்தினை வைத்து வாய்க்கரிசி இடுபவர்கள் இட வேண்டும். பின் கர்த்தா மட்குடத்தை இடது தோளில் வைத்து சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுன் அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு முன்போல குடத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு கொள்ளிக்கட்டையை ஏந்திய வண்ணம் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றின் போதும் குடத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு சுற்றி முடித்த பின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக நின்று பின்புறமாக பிரணவம் சொல்லி கொள்ளியை பிரேதத்தின் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விட்டு, பின்பு கால்மடில் சென்று பவித்திரம், பூணூல் ஆகியவற்றை ஆகியவற்றை சிதையில் போட்டு திரும்பி பாராமல் செல்ல வேண்டும்.
அஸ்தி சஞ்சயனம் - காடாற்று
உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு நாளில் காடாற்று செய்யமுடியும். உடலை தகனம் செய்த இடத்தில் கால் பக்கத்தில் தொடக்கி தலைப்பக்கமாக நீரூற்றி எரியும் நெருப்பை அணைத்த பின் தலைப்பகுதியை வைத்து எரித்த இடத்தில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களை வைக்கவும். மண்கலசம் ஒன்றில் நீர் ஊற்றி அதை தலைப்பகுதியில் வைக்கவும். தகனம் செய்யப்பட்ட உடல் எரித்த இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து கால் பகுதியில் இருந்து தலை நோக்கி கர்த்தா மேற்க்கே பார்க்கும் படி நிற்க புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின் முழங்கால்கல், நாபி,மாபு,நெற்றி,தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தானம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கி மேலே சொன்ன ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைத்து அஸ்திரத்தினால் மூடவேண்டும்.
பின்னர் ஒரு எலும்பையும் விடாது எல்லாவற்றையும் எடுத்து(முடியுமானவரை கர்த்தாவே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் எடுக்கவேண்டும். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து நெற்பொரி,மா அடை,தாம்பூலம்,பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி பலியிட்டு முன்னர் கலசத்தில் எடுத்த அசதியையும், ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றையும் எடுத்து கர்த்தா வடக்கு முகமாக பார்க்க நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக போட்டுக் கரைத்து விடவும். பின்னர் அவர் அதே நீர்நிலையில் தோய்ந்து நக்கினதானம் செய்ய வேண்டும். ஒரு குடத்திலே பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தை சுற்றி வஸ்திரம் கட்டி விளக்கில் நெய் ஊற்றி குடும்பஸ்தராக இருக்கும் ஒரு சிவப்பிராமனருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
எட்டுக்கிரியை
இதை பற்றி எந்த வித சாஸ்திரங்களும் இல்லை என்று சொல்கின்றனர். இருப்பினும் இது காலகாலமாக வழக்கத்தில் இருந்தே வருகின்றது. தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் நாவினை அவர்களுக்கும் வைத்து வருவது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் பொருட்களை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும்.
அந்தியேட்டி
இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். (இது சாதாரண சைவர்களுக்கு) பிரேதத்தின் உடலுக்கு பதிலாக தர்ப்பையினால் சரீரம் போல செய்து அந்தியேட்டி செய்யப்படும். சூர்ணோத்தவக் கிரியை முடித்து அந்த தர்ப்பையினால் செய்யப்பட்டதை தகனம் செய்வர். இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்க்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பது பிண்டங்கள் இடப்படும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச்சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும். பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நட்டுவ மேளம் கொட்ட எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் எடுத்துச் சென்று கர்த்தா இடையளவு தண்ணீரில் நின்றவண்ணம் வடக்கே நோக்க தெற்கு பக்கமாக பிண்டத்தை முன்னும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்யவேண்டும். பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை தின்று நெருப்பு,சாணம்,மண்,வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும்.
வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம்
வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். வீட்டுக்கிரியை செய்பவர் பிராமண குருக்களே. விக்னேஸ்வர பூசை,புண்ணியாகவாசனம்,பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை,இடபதானம், ஏகோதிட்டம்,மாசிகங்கள்,சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் சிவதே ஒழுங்குமுறை.
நவசிராத்தம் - பச்சை அரிசி,காய்கறி வகைகள் தானம் செய்வது
இடபதானம் - எருதுக்கு அலங்காரம் செய்து அதனை பூசித்து தானம் செய்தல். இதற்க்கு வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில் இடபத்தை கீறி அதன் மேல் தேங்காய் ஒன்றை வைத்து அதில் இடபதேவரை இருப்பதாக எண்ணி பூசித்து ஆசாரியார் சொற்படி மந்திரங்களை கூறி தட்சனையுடன் வழங்க வேண்டும்.
ஏகோதிட்டம் - சர்பாத்திரமான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்க வைத்து ஆசனம் கொடுத்து சந்தானம் பூக்கள் எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்தது தானம் கொடுக்க வேண்டும். இதற்க்கு இருபத்திநான்கு ஸ்தானங்கள் சொல்லப்படுகின்றது. பவித்திரம்,பூணூல்,கமண்டலம்,உருத்திராக்கம்,பாதுகை,தண்டம்,கௌபீனம்,திருநீறுப்பை, யோக பட்டம், குடை, குலலாய், மேல்வஸ்திரம், வஸ்திரம்,பொன்,மோதிரம்,ரத்தினம், நெய்,வெண்ணெய், பசு,பூமி,உண்பதற்கு வேண்டிய பொருட்கள், சர்வதானியங்கள், அலங்காரப் பொருட்கள், தாசி, தாசர்கள் போன்றவற்றை கொடுக்கலாம். ஏகோதிட்டத்துக்கு ஒரு பிண்டமிட்டு அதை பூசிக்க வேண்டும்.
சோதகும்ப சிராத்தம் - நீர் நிறைந்த பாத்ஹ்டிரத்தை சாதத்துடன் தானம் செய்தல்
வைதரணி கோதானம் - பசுவை தானமாக கொடுத்தல்(முடியாதவர்கள் பணமாக கொடுக்கலாம்.)
குறிப்பு:
இது உண்மையா என்று தெரியவில்லை. இந்தியாவில் அப்பாவுக்கு இளையமகன் தான் இறுதி சடங்குகள் செய்யவேண்டும். அம்மாவுக்கு முத்த மகன் இறுதி சடங்குகள் செய்யவேண்டும். ஆனால் இலங்கையில் அப்பாவுக்கு மூத்த மகன் தான் இறுதி சடங்குகள் செய்யவேண்டும். அம்மாவுக்கு இளைய மகன் இறுதி சடங்குகள் செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில்(இந்தியா) எவ்வாறு இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு இந்து மத முறைப்படி நடைபெறுகிறது?
வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச் சடங்காகும். ஆதி மனிதர்களிடம் முதன் முதலில் தோன்றிய சடங்கு இறப்புச் சடங்காகும். இதை ஈமச்சடங்கு என்று கூறுவார்கள். ஒருவர் மரணம், அவரின் குடும்பம், பங்காளி, உறவுக்காரர்களைப் பாதிக்கின்றது. இந்த இறப்புச் சடங்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,
1. இறப்பதற்கு முன் நடைபெறும் சடங்கு
2. இறந்த அன்று நடைபெறும் சடங்கு
3. இறந்த பிறகு நடைபெறும் சடங்கு
இறப்புக்கு முன் நடைபெறும் சடங்கு
வயதானவர் நடக்க முடியாமல் கண்ணுத்தெரியாமல் படுத்த படுக்கையிலே நீண்ட நாள் கிடப்பாரெனில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்து, இளநீர் வெட்டிக் குடிக்க சொல்வார். அவ்வாறு செய்தால் அவர் உயிர்போகும். இதைக் கருணைக் கொலை என்று கூறுவார்கள்.
இறப்பிற்குப் பின் நடைபெறும் சடங்கு
ஒருவர் இறந்த உடனே மனிதர் என்ற நிலையைக் கடந்து பொணம் அல்லது சடலம் என்ற பெயரைச் சமுதாயம் அவருக்குச் சூட்டுகிறது. இறந்தவுடன் அவர் வாயில் மண்ணெண்ணெய் உப்பு இரண்டையும் கலந்து ஊற்றுவார்கள்.
எட்டுக்கட்டு
மனிதன் இறந்தவுடன் எட்டு இடங்களில் கட்டுப் போடுவார்கள். இது ‘எட்டுக்கட்டு” என்று கூறப்படும்.
1. இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கைக்கட்டு”.
2. காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவது “கால்கட்டு”.
3. வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடிய வண்ணம் கட்டுவது “வாய்க்கட்டு”.
4. தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களையும் வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவார் “நாடிக்கட்டு”.
5. தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்துவிடாமல் கட்டுவது “தொப்புள் கட்டு”.
6. நாடிக்கட்டையும் வாய்க்கட்டையும் இணைத்து, அவை வெளியில் தெரியாமல் மூடி தலை முடியையும் மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவார்கள். இது “தலைக்கட்டு”.
7. முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி கட்டுவது “முழங்கால் கட்டு”.
8. ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கட்டு “கோவனக் கட்டு”.
இம்முறை பெண்களுக்கும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்த பின் இறந்தவரின் முகம் தெற்குப் பக்கம் பார்க்கும்படி வைக்கப்படுகிறது.
இறந்தவரின் நெற்றியில் காசு வைக்கப்படுகிறது. ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் ஒரு ரூபாய் காசு மட்டும் வைக்கப்படும்.
வழிக்கூட்டி விடுதல்
இறந்தவரின் அருகில் ஒருபடியில் நெல்லை நிரப்பி அதன் மேல் நல்ல விளக்கு வைப்பார்கள். சொம்பில் நீர் வைப்பார்கள். பின் மாலை, தேங்காய், சூடம், பத்தி, வெற்றிலை, சீவல் போன்றவற்றை அவரின் அருகில் வைப்பார்கள். இரண்டு இராட்டியை வாசலில் வைத்து அதன் மேல் சூடத்தை ஏற்றி வைத்து, சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைப்பார்கள். இதனை “வழிக்கூட்டி விடுதல்” என்பார்கள்.
துக்கம் சொல்லி விடுதல்
ஒருவர் இறந்தவுடன் அவ்வூரில் உள்ளவர்களின் மூலம் உறவுக்காரர்களுக்கு துக்கம் சொல்லிவிடுவார்கள். துக்கம் சொல்லுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியைப் (பறையர்களை) சார்ந்தவர்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், இந்த வழக்கம் இப்போது இல்லை. சிலர் தொலைபேசி மூலம் தெரிவித்து விடுகின்றனர்.
ஒப்பாரி
தமிழர்களின் இறுதிச் சடங்கில் இடம்பெறும் பாடல் ஒப்பாரி எனப்படும். ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறு நிலை, புலம்பல், இறங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப் பாட்டு, அழுகைப்பாட், மாரகப்பாட்டு, கைலாசப்பாட்டு எனப் பலவாறாகக் கூறுவர். இறப்பு நிகழ்ந்த வீட்டில் இறந்தவரைப் பார்க்கவும், துக்கம் விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவரை கட்டியணைத்து அழுகின்ற வழக்கமும் உண்டு. ஒப்பாரி பாடுவதால் இறந்தவரின் ஆவி சாந்தி அடைவதாகவும், பாடாவிட்டால் அந்த ஆவி துன்பப்படுவதாகவும் நம்பப்படுகிறது. மனித வாழ்வில் முன்னுரை தாலாட்டாகவும், முடிவுரை ஒப்பாரியாகவும் அமைகிறது. ஒப்பு + ஆரி எனப் பிரித்து ஒப்புச் சொல்லி அழுதல் எனப் பொருள் கொள்கின்றனர்.
கோடி எடுத்து வருதல்
கணவன் இறந்தாலும் மனைவி இறந்தாலும் பெண்ணின் தாய் வீட்டிலிருந்து இறுதிச் சடங்கு செய்யும் வழக்கம் உள்ளது. இதை, பொறந்த இடத்துக் கோடி என்று கூறுவார்கள். அதில் நெல், அரிசி, மஞ்சள், குங்குமம், வளையல், தலைக்குப் பூ, எண்ணெய், சீயக்காய், பச்சை மட்டை (கீத்து) போன்றவற்றை எடுத்து வருவார்கள். கோடிக்குப் பெரும்பாலும் மல்லுத்துணியைத் தான் எடுத்து வருகின்றனர்.
நீர் மாலை
கோடி எடுத்த வந்த பிறகு இறந்தவரின் மகன், மகள், பங்காளிகள் போன்ற ஏழு பேர் அல்லது ஒன்பது பேர் நீராடி உடல் முழுவதும் திருநீரால் பட்டை, நெற்றிகளில் போட்டு நீர் நிறைந்த குடத்தை தூக்கி வருவார்கள். அவர்களுக்கு மேல் வேட்டி பிடித்து வருவார்கள். அந்த நீரால் பிணத்தைக் குளிப்பாட்டுவார்கள்.
குளிப்பாட்டுதல்
தண்ணீர் எடுத்து வந்த குடங்களை வரிசையாக வைத்து, இறந்தவரை வெளியில் எடுத்து வந்து பலகையில் படுக்க வைத்து, ஆண்கள் இறந்தால் ஆண்களும், பெண்கள் இறந்தால் பெண்களும் குளிப்பாட்டுவார்கள், பெண்ணைக் குளிப்பாட்டும்போது சேலையால் மறைத்தும், ஆண்கள் இறந்தால் வேட்டியால் மறைத்தும் குளிப்பாட்டுவார்கள். கோடியில் எடுத்து வரும் பொருட்களையே குளிப்பாட்ட பயன்படுத்துவார்கள்.
வாய்க்கரிசி போடுதல்
இறந்தவர் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக வாய்க்கரிசி போடப்படுகிறது. இதற்குப் பச்சை நெல்லைக் குத்தி, அந்த அரிசியே பயன்படுத்தப்படுகிறது. இறந்தவர் பட்டினியுடன் போனால் அக்குடும்பத்திற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது.
தப்படித்தல்
தெருவில் உள்ளவர்களுக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தப்படித்தலின் மூலம் இறப்புச் செய்தி தெரிவிக்கப்படும். தப்பு அடிக்கும் சத்தத்தை வைத்தே யாரோ இறந்து விட்டார்கள் என்று அறிந்து கொள்வார்கள். இறந்தவரின் உடல் அடக்கம் செய்யும் வரை தப்பு அடிக்கப்படுகிறது. வயதானவர்களோ நல்ல முறையில் வாழ்ந்து முடித்தவர்களோ இறந்து விட்டால் குறவன் குறத்தி ஆட்டமும் வைக்கிறார்கள்.
பிணம் எடுத்தல்
அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின் பிணத்தைத் தூக்கிப் பாடையில் வைப்பார்கள். வைக்கும் போது முகம் வீட்டைப் பார்த்தும் கால்கள் காட்டைப் பார்த்தபடியும் வைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் பாடையில் அவர் கூடவே வைத்து விடுவார்கள். உறவுக்காரர்கள் பாடையைச் சுற்றி மூன்று முறை அழுதுக் கொண்டே வருவார்கள் பிணத்தைத் தூக்கிய பின் அழுதுக் கொண்டே கொஞ்சம் தூரம் வரை செல்வார்கள். பிறகு பெண்கள் அனைவரும் முச்சந்தையில் அமர்ந்து அழுது விட்டு வீடு திரும்புவார்கள்.
சாணம் தெளித்தல்
பிணத்தைத் தூக்கிச் சென்ற பின் அத்தெருவிலுள்ள அனைத்துப் பெண்களும் சாணம் தெளிப்பார்கள். சாணம் தீரும் வரை தெளித்துக் கொண்டே செல்வார்கள். சிலர் தண்ணீர் தெளிப்பார்கள். இறப்பின் காரணமாக ஏற்பட்ட கிருமிகள் நீங்கியும் இடம் தூய்மை அடையும் பொருட்டு பிணம் எடுத்த வீட்டைச் சாணத்தால் மொழுகித் தூய்மை செய்வார்கள்.
முச்சந்தி / சந்திரமரக் கொட்டல்
வீட்டிலிருந்து பிணத்தைத் தூக்கிச் சென்றதும் குறிப்பிட்ட தூரத்தில் மூன்று முறை பிணத்தைச் சுற்றி தோளிலுள்ள வலிகள் போக வேண்டுமென மறுதோளில் வைத்துக் கொள்வார்கள். வழி நெடுகப் பொரி, காசு, மலர்கள் தூவிச் செல்வார்கள்.
இடுகாட்டுச் சடங்கு்
இறந்தவரின் உடல் நற்கதியை அடைய இடுகாட்டில் சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இறப்பு என்து ஒரு குறிப்பிட்ட உலகிலிருந்து அல்லது நிலையிலிருந்து வேறொன்றிற்குச் செல்லுதல் ஆகும். பிரிநிலை, மாறுநிலை, இணை நிலை என்ற மூன்று நிலைகள் மரணத்திற்குப் பின் இருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்படி அடக்கம் செய்யப்படாத பிணங்கள் குழியிலிருந்து வெளியேறி வாழ்பவர்களைத் தாக்கிவிடும். அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்று நம்பப்படுகிறது. இக்கருத்து உலகில் எல்லாப் பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது.
கொள்ளி வைத்தல்
பிணத்தை வைத்து ராட்டியை அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்து விடுவார்கள். கொள்ளி வைப்பவர் தாய்க்குத் தலைமகன், தந்தைக்குக் கடைசி மகன் மொட்டையடித்து மீசை வழித்து குளித்து விட்டு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டு வருவார். வண்ணான் துண்டைப் பிணத்தின் அருகில் விரித்துப் போட்டு வைத்திருப்பார். கொஞ்சம் அரிசியும் வைத்திருப்பார். உறவுக்காரர்கள் கையில் ஒரு ரூபாய், அரிசியுடன் அள்ளுவார். மூன்று முறை சுற்றி, அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டு, காசை துண்டில் போடுவார்கள். கொள்ளி வைப்பவர் நீர்கலையத்துடன் இறந்தவரை (பிணத்தை) மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் போடப்படும். பிறகு பிணத்தின் கால் பகுதியில் நின்று பின்பக்கம் திரும்பி கொள்ளி வைத்து விட்டு மாயானத்தை விட்டு வெளியேறுவார்.
கட்டந்தலை பணம்
பிணத்திற்குத் தீ வைத்து ஆறு அல்லது குளம் போன்றவற்றின் கரையில் வேட்டியை விரித்துப் போட்டு அதில் மாமன், மைத்துனன், பங்காளி முறையோர் இழவுப் பணம் எழுதுவார்கள். அன்று உறவுக்காரர்கள் கலந்துப் பேசி, எட்டுக் கும்பிடுதல், பால் தெளித்தல், கருமாதி போன்ற நிகழ்ச்சிக்கு நாட்களைத் தெரிவிப்பார்கள். பிறகு குளித்து விட்டு வீடு வருவார்கள். அப்போது எதிரில் யாரும் வரக்கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் இறந்தவரின் இடத்தில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். வாசலில் இருக்கும் தண்ணீரில் கால்களைக் கழுவி விட்டு விளக்கு முகத்தில் முழிப்பார்.
சம்பந்தி சடங்கு
“காடு புகையும் போது வீடு புகையக்கூடாது” என்பதால் இறப்பு நடந்த வீட்டில் சோறு ஆக்கும் பழக்கம் கிடையாது. இறப்பு வீட்டாரின் சம்பந்தி உறவு முறையினர் சமைத்துக் கொண்டு வரும் வழக்கம் உள்ளது. அதை அனைவரும் உண்ணுகின்றனர்.
பால் தெளித்தல்
இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்கும் பழக்கம் உள்ளது. இதனை காடமர்த்துதல் என்று கூறுவர். பால் அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று புதைத்த அல்லது எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளிப்பார்கள். ஆண்கள் மட்டும் சுடுகாட்டுக்குச் செல்கின்றனர். பெண்கள் இறந்தவரின் இடத்தில் பாலை வைத்து வணங்கி விட்டு அழுது விட்டும் அப்பாலை இறந்தவரின் இடத்திலோ குளத்திலோ ஊற்றி விடுகின்றனர்.
எட்டாம் நாள்
இறந்தவருக்கு எட்டாம் நாள் “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இறந்த அன்றே இச்சடங்கு தெரிவிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வருவார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் வைப்பார்கள். ஒப்பாரி வைத்து அழுவார்கள், அவர் மீது தண்ணீர் தெளித்து ஒப்பாரி நிறுத்தப்படும். கொள்ளி வைத்தவர் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்குவார். இறப்புச் சடங்குகளை வண்ணாரும் பரியாரியும் செய்வர்.
கல் நிறுத்துதல்
கருமாதி செய்யும் முதல் நாள் கல் நிறுத்தப்படும். இதற்குப் பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தெரிவிப்பார்கள். பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் வள்ளுவர் கல் நிறுத்துதல் என்னும் சடங்கினைச் செய்ய தொடங்குவர். இதற்கு இறந்தவரின் நினைவாக ஒரு முழு செங்கல்லை நீராட்டி அக்கல்லில் பூச்சரத்தைச் சுற்றி உயிர் விட்ட இடத்திலோ அல்லது திண்ணையிலோ இந்தக் கல் நிறுத்துதல் என்னும் சடங்கு முறை நிகழ்த்தப்படும். அதில் இறந்தவருக்குப் பிடித்தமான உணவு வகைகள் முழு வாழை இலையில் வைத்துப் படையல் போடப்படும். வள்ளுவர் சடங்கு முடிந்த பின் உறவுக்காரப் பெண்கள் சிறு வட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுவார்கள். அதிகாலையில் கொள்ளி வைத்தவர் இக்கல்லை எடுத்துக் கொண்டு ஆறு அல்லது கம்மாயி, ஏதோ நீர்நிலை வசதியுள்ள இடத்தில் அமர்ந்து சடங்குகள் செய்வர்.
கருமாதி
பதினாறாம் நாள் காலையில், புரோகிதர் (வள்ளுவர்) மற்றும் உறவுக்காரர்கள் கொள்ளி வைத்தவரைச் சந்திப்பார்கள். அது கருமாதித் துறை என்று அழைக்கப்படுகிறது. வள்ளுவருக்கு முன்னே கூலியில் ஒரு பங்கு வழங்கப்பட்டு விடும். கருமாதி செய்வதற்கான அரிசி, பச்சைக் காய்கறிகள், ஒன்பது வகை தானியங்கள், வெற்றிலை, சீவல், சூடம், சாம்பிராணி, தேங்காய், கருமாதி செய்வதற்கான சிறு சிறு கலையங்கள், நூல்கண்டு, இறந்தவரின் வீட்டில் செய்யப்பட்ட உப்பு இல்லாத சோறு போன்றவற்றை வைத்து கருமாதிச் சடங்கினைச் செய்து முடிப்பார். சிறு வீடு மாதிரி மண்ணால் கட்டி அதில் நான்கு புறமும் வாசல்படி அமைத்துச் சடங்கு தொடங்கும்.
புதிய வேட்டி சட்டை
கருமாதி சடங்கு முடித்ததும் தாய்மாமன், பெண் எடுத்த வகை உறவினர்கள், மாமன் மச்சான் உறவினர்கள், வேட்டி, சட்டை, கொள்ளி வைத்தவருக்கு உடுத்தியும், அவரின் சகோதர்களுக்கு உடுத்தியும், வீட்டுக்கு வருவார்கள், உணவு சமைத்து இருக்கும். மொய் வைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மொய் வைத்தும், உணவு சாப்பிட்டு உறவினர்கள் வீடு அல்லது ஊர் சென்று விடுவார்கள்.
முப்பதாம் நாள் படையல்
முப்பதாம் நாள் (இறந்ததிலிருந்து முப்படாவது நாள்) அவரின் நினைவாகப் படையல் போடப்படும் வழக்கம் உள்ளது. அன்று பெட்டைக்கோழி அடித்துப் படையலைத் தொடங்குவர்.
ஆண்டுப்படையல்
ஒரு வருடம் கழித்து இறந்த நாளில் மீண்டும் இறந்தவரை நினைத்து அவருக்குப் பிடித்தமான உனவு வகைகளை வைத்துப் படையலிடுவார்கள். இதில் உறவுக்காரர், பங்காளி உறவுமுறையோர் கலந்துக் கொள்வார்கள், ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்தச் சடங்கு முறைகளை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். நாம் முன்னோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திவசம் (திதி) கொடுப்பது நாள்தோறும் கொடுப்பது போன்றது. நமக்கு ஓர் ஆண்டு என்பது அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும் என்பது மக்கள் நம்பிக்கை.
Hindu Funeral Traditions
Tamil Funeral Traditions
Hindu Funeral Rites
How Tamil People do Funeral
Credits:
நன்றி,
முனைவர் சி.சுந்தரேசன், துறைத்தலைவர், நாட்டுப்புறவியல் துறை
tamilvu.org
தொகுப்பு: சதீஷ்
sshathiesh.blogspot.com
No comments:
Post a Comment